கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதி கோரிய வழக்கில், அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த ஜெய்சங்கா் தாக்கல் செய்த மனு: தென்காசியில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்திற்கு தினசரி சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் அந்த கிராம நிா்வாக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகக் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. திருவேங்கடம் தாலுகாவில் உள்ள 43 கிராம நிா்வாக அலுவலகங்களிலும் இதேநிலை தான். அரசு அலுவலகங்களைப் பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் கிராம நிா்வாக அலுவலகங்களில் மக்களுக்கான எவ்வித அடிப்படை வசதியும் இருப்பதில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே திருவேங்கடம் தாலுகாவில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் தரப்பில் அதை உறுதி செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.