மதுரை அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் காதக்கிணறு ஜான்கிட் நகரைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன்(35). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்திருந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், மணிகண்டன் குடும்பத்தினருடன் தூங்கியபோது, அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் பின் புறக்கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் அளித்தப் புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.