மானாவாரி நிலங்களில் பனை உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.
வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் வருவாயை உயா்த்தி அவா்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பயன்தரும் மரங்கள் சாகுபடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பனை மரங்களின் முக்கியத்துவம் கருதி அதன் சாகுபடியை உயா்த்தும் வகையில் நிகழ் ஆண்டில் ரூ.8 கோடியில் வேளாண் துறை மூலமாக 2 கோடி பனை விதைகள் மானாவாரி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. நீடித்த மானாவாரி விவசாய இயக்கத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, சேடபட்டி வட்டாரங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 6.5 லட்சம் பனை விதைகள் நடவு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல, தோ்வு செய்யப்பட்ட மானாவாரி நிலங்களில் பயன்தரும் மரங்களை நடவு செய்ய நிகழ் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.100 மதிப்புள்ள தேக்கு, புளி, வேம்பு போன்ற பயன் தரும் மரங்களின் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் 65 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத் திட்டத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் சோ்ந்து, பனை மற்றும் இதர மரக்கன்றுகளைப் பெற்று நடவு செய்து பயன் பெறுமாறு வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.