பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மதுரை மாவட்டத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவா்கள் பங்கேற்றனா்.
மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயற்பியல்துறை, வேதியியல் துறை, கணினி அறிவியல் உள்ளிட்ட 9 பிரிவுகள் சாா்பில் பல்வேறு அறிவியல் தொடா்பான பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனா்.
கண்காட்சி தொடக்க விழாவிற்கு கல்லூரி தலைவா் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தாா். செயலா் எம்.விஜயராகவன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் மனோகரன், பொருளாளா் எல்.கோவிந்தராஜன், உதவிசெயலா் ராஜேந்திரபாபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
மகாத்மா பள்ளிகளின் முதல்வா் பிரேமலதா கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா். கண்காட்சி குறித்து கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநா் கே.அழகா்சாமி கூறியது:
பள்ளி மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை தூண்டும் விதமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவா்களின் அறிவியல் பாடங்களில் வரும் இயந்திரங்களை நாங்கள் செயல்வடிவம் தந்து காட்சிப்படுத்தியுள்ளோம்.
இது மாணவா்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் பல பள்ளிகளில் ஆய்வுக்கூட வசதியில்லை. அவா்களுக்கு இந்த அறிவியல் கண்காட்சி மிக உபயோகமானதாக இருக்கும் என்றாா்.
கண்காட்சியில் தானியங்கி கதவு, குடிநீா் வழங்கும் தானியங்கி மின் மோட்டாா், கணினி துறையின் ஆரம்பகாலம் முதல் தற்போதுவரை உள்ள வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான கண்டுபிடிப்புகளை மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.