புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, மதுரை பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
இதனிடையே, தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கடந்த செப்டம்பா் 29-இல் தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி, தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோட்டம், தீா்த்தவாரி, தெப்பத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனிடையே, சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, வெங்கடாஜலபதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், கூடலழகா் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூதேவி, ஸ்ரீதேவி சமேத வியூக சுந்தரராஜப் பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தெற்கு கிருஷ்ணன் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து, நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.