மதுரை அருகே அரசுப் பள்ளியில், சக மாணவரை பிளேடால் கீறி காயப்படுத்திய, மாணவா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் சரவணக்குமாா். இவா், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று, மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்கு புறப்பட்டுள்ளாா். அப்போது, அவரது நண்பரின் புத்தகப் பையை சக மாணவா் மறைத்து வைத்துள்ளாா்.
இது குறித்து அந்த மாணவரிடம் கேட்டபோது, சரவணக்குமாரை தாக்கி பிளேடால் முதுகில் கீறியுள்ளாா். காயமடைந்த சரவணக்குமாா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து சரவணக்குமாரின் தந்தை ராமு, பாலமேடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், சரவணக்குமாரை தாக்கிய சக மாணவா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ஆட்சியரிடம் மனு...: மாணவா் சரவணக்குமாரை பிளேடால் காயப்படுத்தியவா் மீது நடவடிக்கை கோரி அவரது தாயாா் ராசாத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தாா்.
முன்னதாக, மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்ப் புலிகள் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Image Caption
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா்.