மதுரையில் மகாகவி பாரதியாருக்கு ஆள் உயர சிலை அமைக்க வேண்டும் என அமுதசுரபி கலைமன்றம் சார்பில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை அமுதசுரபி கலைமன்றம் சார்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் 98-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரை இந்தியாவின் தேசிய கவியாக அறிவிக்க வேண்டும். மதுரையில் பாரதியாருக்கு ஆள் உயர சிலை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவசமாக பாரதியார் கவிதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அமுதசுரபி கலைமன்றத் தலைவர் வீ.பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கு.சாமிதுரை, சேதுபதி மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் பள்ளி வளாகத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி மாணவர்களுக்கு பாரதியாரின் கவிதைப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து பாரதிக்கு மரியாதை செலுத்தினர். மன்றச் செயலர் சீ.கந்தசாமி, துணைச் செயலர் வி.சிவசங்கரக்குமார், பொருளாளர் க.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.