மதுரை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகை (டிஜிட்டல் பேனர்) வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: பொது இடங்களில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் தட்டிகள் வைப்பது சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, விளம்பரப் பதாகைகள் வைக்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தை 15 நாள்களுக்குள் முன்பாக ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.உரிய அலுவலர்களிடம் பெறப்பட்ட தடையின்மைச் சான்றுகளை இணைத்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்பட்சத்தில் 48 மணி நேரத்தில் அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் 6 நாள்கள் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி தரப்படும். அனுமதி பெறாமல் வைக்கப்படும் பதாகைகள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படும்.
அனுமதி பெறாத விளம்பரப் பதாகைகள் வைப்பவர்கள் மீது காவல் துறை மூலமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி அனுமதி பெறாத பதாகைகள் வைப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வழிவகை உள்ளது என்றார்.