மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் கார் முன் அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரதான கட்டட நுழைவுவாயிலில் மாவட்ட ஆட்சியரின் கார் நிறுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் அப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த ஒரு பெண், கார் அருகே அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.
அப்பெண், மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த அழகு செல்வி என்பதும், கணவர் பெயர் ராமமூர்த்தி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தை உள்ள நிலையில், ராமமூர்த்திக்கு வேறொரு பெண்ணுடன் தவறான பழக்கம் இருப்பதாகவும், ஆகவே ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்டதாகவும் அழகுசெல்வி போலீஸாரிடம் தெரிவித்தார்.
அதன்பின்னர், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிப்பதற்கு அழகு செல்வியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரது மனு மீது கோ.புதூர் போலீஸார் விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.