தமிழகத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடைவிதிக்கக்கோரிய வழக்கில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டு, பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் தொடர்ந்து நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் சட்டத்திற்கு புறம்பாக நெகிழிப் பொருள்கள் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருள்கள், பனை ஓலைப் பொருள்கள் தயாரிப்புத் தொழில் நலிவடைந்துள்ளது. எனவே நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் தற்போதையை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.