மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த புங்கங்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புங்கங்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் கீழ் பணிபுரிபவர்களை அதிகமாக கணக்கு காட்டி முறைகேடு நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமாரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும் மோசடியில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளரை மாற்றவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.