மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில், சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாக முகிலன், செந்தில்பிரபு, சபீர், கார்த்திகா உள்ளிட்ட 64 பேர் மீது அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்தனர். பின்னர் இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் ( எண் 4) ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் பிப்ரவரி மாதம் காணாமல் போனதால், அவர் மீதான வழக்கு தனி வழக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வழக்கில் முகிலன், செந்தில்பிரபு, சபீர், கார்த்திகா உள்ளிட்ட 5 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். மற்ற 58 பேர் மீதான வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் தொடர்புடைய முகிலன் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண் 2) ஆஜரானார். அவருடன் சேர்ந்து செந்தில்பிரபு மற்றும் சபீர் ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.