மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் நாகராஜன், பல்கலைக்கழக தொழில் முனைவோர் மையத்தைத் தொடங்கி வைத்தார். இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியது: உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சியின் பயன்கள் சமூகத்துக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் அல்லாத உயர்கல்வி நிறுவனத்தில் முதன் முறையாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தான் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வியை முடித்து வேலை தேடுவதைத் தவிர்த்து, புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குபவர்களாக உருவாக்கும் வகையில் இம் மையம் செயல்படும். அதற்கேற்ப, மாணவர்களின் வழக்கமான படிப்புகளுடன், தொழில் சார்ந்த படிப்புகளும் கூடுதலாக வழங்கப்படும்.
தொழில் திறனில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சிறிய தொழில்கூடம் அமைப்பதற்கு பல்கலைக்கழகம் நிதியுதவி அளிக்கும். காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த மையத்தின் மூலமாகப் பயன்பெறுவர் என்றார்.