மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மலர் சந்தையில், நெகிழிப் பைகள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் திங்கள்கிழமை அபராதம் விதித்தார்.
மலர் சந்தையில் உள்ள கடைகளை ஆணையர் ஆய்வு செய்தபோது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. அதையடுத்து அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்ட அவர், கடை உரிமையாளர்கள் 50 பேருக்கு மொத்தம் ரூ.17 ஆயிரத்து 500 அபராதம் விதித்தார். மீண்டும் நெகிழிப் பைகள் பயன்படுத்தினால் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
முன்னதாக, மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தையில் நடந்த கூட்டுத் துப்புரவுப் பணியை பார்வையிட்டார். சந்தையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு மணல் கொட்டவும், அதேபோல, மழைநீர் வடிகாலில் குப்பைகள் தேங்காதவாறு சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தினார்.