மதுரை மாவட்டம் பேரையூரில் விதிகளை மீறி கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) உத்தரவின்படி, கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் "செட்-டாப் பாக்ஸ்'கள் வழங்கப்பட்டு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அனலாக் முறையில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனலாக் முறையில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து வட்டாட்சியர் ஆனந்தி செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, ஒளிப்பரப்பு அறையில் இருந்த மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.