திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணியில் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், திருமங்கலத்தில் பல்வேறு விபத்துகளில் உயரிழந்தவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
செக்கானூரணியில் கடந்த 5.7.2019 இல் நிகழ்ந்த கட்டட விபத்தில் அருண்குமார், பாலமுருகன், முத்துப்பாண்டி, காசிநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கு, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதேபோல், பேரையூரில்
கட்டட விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமார் என்பவரது குடும்பத்தாருக்கும் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும், திருமங்கலம் தொகுதியில் பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்த 10 பேர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், தொழிலாளர் உதவி ஆணையர் சிவானந்தம், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, திருமங்கலத்தில் மதுரை-கம்பம்-ஈரோடு, மதுரை-கம்பம்- கோவை, மதுரை-ராமேசுவரம்-கோவை உள்ளிட்ட 10 புதிய வழித்தடங்களுக்கான பேருந்துகளை தொடக்கி வைத்தார்.
பின்னர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடக்கி வைத்தார்.