தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழையால், மதுரை காய்கறிச் சந்தைகளுக்கு வரத்தின்றி வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலும், மழைக் காலத்தில் ஈரப்பதத்துடன் அறுவடை செய்யப்படும் வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்காது என்பதால், விவசாயிகள் அறுவடை செய்வது இல்லை. அதேநேரம், மழை ஓய்ந்தும் நிலம் உலராவிட்டால், அழுகல் நோய் ஏற்பட்டு வெங்காய விளைச்சல் பாதிக்கும். எனவே, மழைக் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலங்களில் இருந்துவரும் சின்னவெங்காயம் மற்றும் பல்லாரியின் வரத்து வெகுவாகக் குறைந்துவிடும். இதனால், வரத்தின்றி தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ். முருகன் கூறியது: கடந்த மாதம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்ற சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரியின் விலை, தற்போது ரூ.20 வரை உயர்ந்துள்ளது. ஈரப்பதமுள்ள சின்னவெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையும், உலர்ந்த வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.
இதேபோல், ஈரப்பதமான பல்லாரி ரூ.40 முதல் ரூ.50 வரையும், உலர்ந்த பல்லாரி ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்கப்படுகிறது என்றார்.