மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா: 51,528 பேருக்கு பட்டம்: 270 பேருக்கு நேரில் வழங்கினார் ஆளுநர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 51,528 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பிஎச்டி மற்றும் பல்வேறு பாடங்களிலும் சிறப்பிடம் பெற்ற 270 பேருக்கு தமிழக ஆளுநர்


மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 51,528 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பிஎச்டி மற்றும் பல்வேறு பாடங்களிலும் சிறப்பிடம் பெற்ற 270 பேருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார்.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 53-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலை.யின் மு.வ.அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பருவமுறை மற்றும் அல்பருவ முறையில் தேர்ச்சி பெற்ற 51,528 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் 246 பேர், டி.லிட் பட்டம் பெற்ற இருவர் மற்றும் தத்தம் பாடப் பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் 72 பேர் என 270 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹெச்.எல்.கோகலே பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.
 இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உயர்கல்வியில் மிகச் சிறந்த நிலையை அடைந்திருக்கிறது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களுடன் இதுவரை 25 புரிந்துணர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நிதிநல்கை அமைப்புகள் வழங்கியுள்ள நிதியில், பல்கலை.யின் பல துறைகளில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
 உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. 2018- 19-ஆம் ஆண்டுக்கான மத்திய மனிதவளத் துறை வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக இருக்கிறது. தேசிய  சராசரியான 26.3 சதவீதத்தைக் காட்டிலும் தமிழகம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.
 உயர்கல்வியின் வளர்ச்சிக்காக கடந்த 2011 முதல் அதிமுக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தான் இதற்கு காரணம். 82 புதிய கல்லூரிகள் மற்றும் 1,666 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
 கல்வி என்பது வாழ்க்கையின் திறவுகோல் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். பிரச்னையைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பைக் கொடுத்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்றார்.
துணைவேந்தர் மு.கிருஷ்ணன்: மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் கடந்த 52 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சிறந்த பல்கலை.களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள நிகழ் ஆண்டுக்கான தேசிய அளவிலான பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் காமராஜர் பல்கலைக் கழகம் 54 ஆவது இடத்தில் இருந்து 45 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார்.
 விழாவில் உயர்கல்வித் துறைச் செயலர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், பல்கலைக் கழகப் பதிவாளர் ஆர்.சுதா,  சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com