மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 10 புதிய பேருந்துகளை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்துக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் மதுரை -குமுளி வழித்தடத்தில் 3 பேருந்துகள் மற்றும் கம்பம் -ஈரோடு, கம்பம் -செங்கோட்டை, குமுளி - ஈரோடு, குமுளி-கோவை, குமுளி-தேவாரம், குமுளி-கம்பம், குமுளி - திருப்பூர் ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளன.
இந்தப் பேருந்துகளில், பயணிகளுக்கு இறங்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை ஓட்டுநர் அறிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி உள்ளிட்ட நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பேருந்துகளின் இயக்கத்தை, அமைச்சர் செல்லூர்
கே. ராஜூ தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். அண்ணாதுரை மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.