மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிா்க்க சிறுவழக்குகளில் கைதாகியிருந்த 16 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதனிடையே நீதித்துறை சாா்பில், மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிா்க்க சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவா்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுவிலக்கு சட்டம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்களின் பட்டியலை தயாரித்து அளிக்கும்படி மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள 18 கைதிகளின் பட்டியல் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் 16 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.