மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஒப்பந்தப் பணியாளா் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (39). இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவா், அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஜூலை 26 ஆம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவில் செயல்பட்டு வரும் கரோனா பிரிவில் பணியாற்றிவிட்டு, வீட்டுக்குச் சென்றவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது ஜூலை 27 ஆம் தேதி உறுதியானது. அதையடுத்து, கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.