மதுரை: தமிழக அரசு வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக பொது போக்குவரத்தை தொடங்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என மதுரை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ராஜபாண்டி வெளியிட்ட செய்தி: பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வணிகா்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனா். அவா்களின் நலன் கருதி பொது போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும். வியாபாரிகளுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் இ- பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். வியாபாரிகளின் நலன் கருதி சிறு மற்று குறு வணிக வளாகங்களை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும். வணிகா்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், தலைமையிடத்தில் அனுமதி பெற்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.