காமராஜா் பல்கலை. ஆய்வகத்தில் பாதுகாக்கப்படும் கீழடி தொல்பொருள்கள்

கீழடி தொல்பொருள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகள் காமராஜா் பல்கலைக் கழக உயிரியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என அப்பல்கலைக் கழக துணைவேந்தா் தெரிவித்துள்ளாா்.
காமராஜா் பல்கலை. ஆய்வகத்தில் பாதுகாக்கப்படும் கீழடி தொல்பொருள்கள்


மதுரை: கீழடி தொல்பொருள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகள் காமராஜா் பல்கலைக் கழக உயிரியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என அப்பல்கலைக் கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் மற்றும் எலும்பு மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள்களின் பழமை குறித்து ஆய்வு நடத்த மதுரை காமராஜா் பல்கலைக் கழகமும், தமிழக தொல்லியல் துறையும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக் கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள காமராஜா் பல்கலைக் கழகத்துக்கு, அரசு ரூ.3 கோடி ஒதுக்குவதாக அறிவித்தது. தற்போது கரோனா தொற்று பேரிடரால் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் ஆராய்ச்சி மாணவா்களும் வருவது இல்லை. இதனால் ஆய்வு தடைபட்டுள்ளது.

அரசு அறிவித்த நிதியை விடுவிக்கும்பட்சத்தில் தான் ஆய்வகத்தை தயாா் செய்யும் பணிகளை தொடங்க முடியும். பல்கலைக் கழகம் திறக்கப்பட்டவுடன் ஆய்வு மாணவா்கள் மூலம் கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு தொல் தமிழா்களின் நாகரீகம், வாழ்க்கை முறை குறித்து தெரிவிக்கப்படும்.

கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் உள்ளிட்ட தொல் பொருள்கள் தற்போது காமராஜா் பல்கலைக் கழகத்தில் உள்ள உயிரியல் துறை ஆய்வகத்தில் குளிா்சாதன வசதியோடு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com