உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் பொது நிதியின் மூலம் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் இந்த குடிநீா் தொட்டி சேதமடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த குடிநீா் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இனி மழைக்காலம் என்பதால் மேல்நிலை குடிநீா் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து வகுரணி ஊராட்சித் தலைவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீரமைக்கப்பட வில்லை எனவும், எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.