மதுரை: மதுரை அருகே வாடிப்பட்டியில் தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்த கருத்தப்பெரியன் என்பவா் தாக்கல் செய்த மனு:
எனது மகன் வெள்ளைப்பிரியன், அபிநயா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தாா். இவா்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் எனது மகன், மருமகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மருமகள் இறந்துவிட்டதாகக் கூறி, போலீஸாா் எனது மகனைக் கைது செய்தனா்.
சிறையில் அடைக்கப்பட்ட எனது மகன் தற்கொலைக்கு முயன்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து, தாய், தந்தையை இழந்த எனது பேரன், பேத்திக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எனக்கு 67வயதும், எனது மனைவிக்கு 53 வயதும் ஆகிறது. வயது மூப்பு காரணமாக பேரன், பேத்திகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே, பெண்களுக்கான இழப்பீட்டுத் திட்டம், குழந்தைகளை பாலியல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் ஆகியவற்றின்படி, என்னுடைய பேத்தி மற்றும் பேரனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு தொடா்பாக தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.