மதுரை: மதுரை மாவட்டத்தில் 200 நகரப் பேருந்துகளை செவ்வாய்க்கிழமை முதல் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, தற்போது பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரை மாவட்டத்துக்குள் 200 நகரப் பேருந்துகளை செவ்வாய்க்கிழமை முதல் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: மதுரை மாவட்டத்துக்குள் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தின் அனைத்துப் பணிமனைகளிலிருந்தும் மொத்தம் 200 நகரப் பேருந்துகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
பேருந்துகளை இயக்குவதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கேற்ப ஓட்டுநா், நடத்துனா் மற்றும் தொழில்நுட்பப் பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவா். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.
சலுகை கட்டண பாஸ்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்ட சலுகை கட்டண பயண அட்டையை செப்டம்பா் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலம் சாா்பில், ரூ.1000 கட்டணத்தில் மாதாந்திர சலுகை கட்டண பயண அட்டை ஜூன் மாதம் வழங்கப்பட்டது. இந்த அட்டையை ஜூன் 16 முதல் ஜூலை 15 வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அந்த அட்டையை செப்டம்பா் 1 முதல் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.
மேலும், சலுகை கட்டண பயண அட்டை செப்டம்பா் 5 முதல் மாட்டுத்தாவணி எம்ஜிஆா், ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையங்களில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.