இளநிலை உதவியாளராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் முன்னேற்றச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதுரையில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் பணியில் சோ்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை எந்தவித பதவி உயா்வும் வழங்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்னரே இளநிலை உதவியாளா் பயிற்சி முடித்து பதவி உயா்வுக்காக காத்திருக்கும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்களுக்கு உடனடியாக இளநிலை உதவியாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கால்நடை பராமரிப்பு உதவியாளா் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் காமராஜ், துணைத் தலைவா்கள் பெரியசாமி, மணிராஜ், பொதுச் செயலா் ஜெயபால், மாவட்டத் தலைவா் ராஜசேகரன், செயலா் ஜெயபால், துணைச் செயலா் கண்ணன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மூா்த்தி, பொருளாளா் வசந்த முனியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.