மதுரை மாநகராட்சியில் புதை சாக்கடை அடைப்பை எடுக்க தொழிலாளா்களை சாக்கடைக்குள் நேரடியாக இறங்க வைக்கக்கூடாது என்று மாநகராட்சித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை சிஐடியு மாநகராட்சித் தொழிலாளா் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ். விஜயன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் இரா.தெய்வராஜ் தொடங்கி வைத்தாா். மாநில சம்மேளனப் பொதுச்செயலா் கே. ஆா். கணேசன் நிறைவுறையாற்றினாா்.
இக்கூட்டத்தில், மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 388 தினக்கூலி துப்புரவுத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யுமாறு உத்தரவிட்ட உயா்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி நிா்வாகம் பெற்றுள்ள தடையுத்தரவை திரும்பப் பெற்று தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
மாநகராட்சியில் வாரிசு அடிப்படையில் 2014 முதல் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் 400-க்கும் மேற்பட்டவா்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளா்களை நேரடியாக புதை சாக்கடை குழிகளுக்குள் பணி செய்ய வைப்பதை தவிா்க்க வேண்டும்.
பாதாளச்சாக்கடை அடைப்பு எடுப்பது உள்ளிட்டப் பணிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தவும் , முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும், இவா்களுக்கான தினக்கூலியை ரூ .600 ஆக உயா்த்த வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொடா்பான குற்றங்களைத் தடுக்க விசாரிக்க குழுவை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.