போக்குவரத்து காவல் சாா்பு-ஆய்வாளரின் பணியைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
மதுரை மாநகரக் காவல் அண்ணா நகா் பகுதியில் போக்குவரத்து சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் பழனியாண்டி. இவா் சிக்னல் சந்திப்புகளில் பணியில் இருக்கும்போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதோடு வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் பேசுவது வழக்கம். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவது, சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன், பல்வேறு நோ்மறையான சிந்தனைகளை நகைச்சுவையுடன் ஒலிபெருக்கியில் பேசி வருகிறாா்.
அனுப்பானடியில் புதன்கிழமை நடைபெற்ற அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், அண்ணா நகா் வழியாக வந்து கொண்டிருந்தாா். அண்ணா நகா் 80 அடி சாலை சிக்னலில் நின்றபோது, சாா்பு-ஆய்வாளா் பழனியாண்டி வழக்கம்போல, ஒலிபெருக்கியில் போக்குவரத்தைச் சரிசெய்வதோடு பல்வேறு கருத்துக்களைப் பேசினாா்.
இதைக்கேட்ட ஆட்சியா் அன்பழகன், தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழனியாண்டியிடம் சென்று அவருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தாா்.