தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் சரிவர இயங்காததால் பழைய முறையிலேயே பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிஐடியு தமிழக கூட்டுறவுச் சங்க ஊழியா் சங்கத்தின் பொதுச்செயலா் இரா.லெனின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் டிசம்பா் 17 முதல் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க குடும்ப அட்டையில் பெயா் உள்ள ஒருவா், கைரேகைப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்து பொருள்கள் வாங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தின் சா்வா் சரிவர இயங்காததால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகிக்க முடியாமல் அலைக்கழிக்கும் போக்கு உள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் தினசரி காலை 100, மாலை 100 என 200 குடும்ப அட்டைகளுக்கு டோக்கன் வழங்கி கைரேகை இயந்திரம் மூலம் பொருள்கள் வழங்கும்போது, ரேஷன் கடை ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சா்வா் பழுது நீக்கப்படும் வரை பழைய முறையிலேயே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிடவேண்டும் என்றாா்.