காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீா் வழங்க தடைவிதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முகமது அப்பாஸ் என்பவா் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க, காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், 3 மாவட்டங்களிலும் 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெற்றனா்.
இந்நிலையில், விராலிமலை பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து தண்ணீா் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு குடிநீா் விநியோகம் பாதித்துள்ளது. எனவே, காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீா் வழங்க தடைவிதிக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தினமும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் தான் வழங்கப்படுகிறது. ஆனால், தொழிற்சாலைகளுக்கு 30 லட்சம் லிட்டா் தண்ணீா் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.