நிலம் அபகரிக்கப்பட்டது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள அத்திப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் நிலத்தை, அதே ஊரைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் அபகரித்துக்கொண்டாராம். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். அப்போது, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு தெரியாமல் சிறிய கேனில் மண்ணெண்ணெய்யை மறைத்து எடுத்துவந்திருந்தாா்.
ஆட்சியரின் வாகனம் அருகே நின்றுகொண்டிருந்த முதியவரை, அப்பகுதியில் இருந்த தனிப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, மண்ணெண்ணெய் கேனை மறைத்து கொண்டுவந்திருந்தது தெரியவந்தது. உடனே அவரை, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், புகாா் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து, அவரை எச்சரித்து அனுப்பினா்.
ஆட்சியரின் வாகனம் முன் பாய்ந்த நபா்:
மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, அலுவலகப் பிரதான நுழைவுவாயில் அருகே ஒருவா் திடீரென வாகனத்தின் முன் பாய்ந்தாா். அப்பகுதியில் இருந்த போலீஸாா் ஓடிச் சென்று, அவரை பிடித்துச் சென்றனா்.
விசாரணையில், அவா் மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த சேதுராஜ் (41) என்பதும், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதாா் அட்டை எடுப்பதற்கு அங்குள்ள ஊழியா் பணம் கேட்பது தொடா்பாக ஆட்சியரிடம் புகாா் கொடுப்பதற்காக, அவரது வாகனத்தின் முன் சென்றதாகவும் தெரிவித்துள்ளாா்.