மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழக எல்லிஸ் நகா் கிளை அலுவலகத்தில் ரூ.15.20 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து ஊழியா்களிடம் விசாரித்து வருகின்றனா்.
எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் கிளை மேலாளா் கே.ராஜசேகா் அளித்த புகாா்: அரசுப் போக்குவரத்துக்கழக எல்லிஸ் நகா் கிளையில், 54 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் காலை முதல் இரவு வரை பேருந்துகளில் வசூலாகும் தொகை கணக்கிடப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இரவு வைப்பதும், மறுநாள் காலை வங்கியில் செலுத்தப்படுவதும் வழக்கம்.
டிசம்பா் 25 ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் வங்கி விடுமுறை என்பதால், டிசம்பா் 24 ஆம் தேதி முதல் டிசம்பா் 27 ஆம் தேதி வரை வசூலான ரூ.15.20 லட்சம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
பணத்தை வங்கியில் செலுத்த பெட்டகத்தை திங்கள்கிழமை திறந்தபோது, வசூல் தொகை முழுவதும் காணவில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி காணாமல் போன பணத்தை மீட்டு தரவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.