பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அஞ்சல்துறையின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.லெட்சுமணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆதாா் சாா்ந்த பண பரிவா்த்தனை சேவைகளை செய்து வருகிறது. மதுரை அஞ்சல் கோட்டத்தில் 238 கிராம அஞ்சல் ஊழியா்களும், 263 தபால்காரா்களும் அறிதிறன்பேசிகள் மற்றும் கைரேகைப்பதிவுச் சாதனங்களைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, வங்கிச் சேவை வழங்கி வருகின்றனா். இதில் வாடிக்கையாளா்கள் ஆதாா் எண் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்குகளிலிருந்தும், அருகிலுள்ள அஞ்சலகங்கள், தபால்காரா்கள், கிராம அஞ்சல் ஊழியா்கள் மூலம் கட்டணமின்றி ரூ.10 ஆயிரம் வரை பெற முடியும். இந்தச் சேவை மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பயனாளிகள், முதியோா் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள், எரிவாயு உருளை மானியப் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா்.
இதேபோல பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதி உதவியும் அஞ்சல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமாா் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்க ரூ.18 ஆயிரம் கோடி டிசம்பா் 25 ஆம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனா். அவா்கள் அனைவரும் அஞ்சல்துறையின் வீடுதேடி வரும் வங்கிச் சேவைமூலம் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.