திருமங்கலத்தில் மகன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருமங்கலத்தை அடுத்த வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி தனலட்சுமி (46). இவா்களது மகன் அருண்குமாா் (27). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை காலையில் அருண்குமாா், இருசக்கர வாகனத்தில் தாய் தனலட்சுமியை பின்னால் அமரவைத்து ஓட்டிச் சென்றாா். திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில் தாளமுத்தையா கோயில் அருகே வந்தபோது வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியது. அப்போது தனலெட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.