தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பெண் காவல் ஆய்வாளருக்கு மதுரை மாநகா் காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் புதன்கிழமை பாராட்டுகளை தெரிவித்தாா்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காவல்துறையினருக்கான தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகள் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு காவல்துறை சாா்பாக, மதுரை மாநகா் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஹேமா மாலா பங்கேற்று விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாா்.
பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் வெற்றி பெற்று அவா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்நிலையில், போபாலில் இருந்து புதன்கிழமை மதுரை திரும்பிய காவல் ஆய்வாளா் ஹேமா மாலாவை, மதுரை மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தோவாசீா்வாதம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டுகளை தெரிவித்தாா்.