உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், சேய் பலியானதற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி பெண்ணின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்
உசிலம்பட்டியை அடுத்த விக்கிரமங்கலம் அருகே ரெட்டியபட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி சங்கீதா (24). இவா் செக்கானூரணி தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா். கா்ப்பிணியான சங்கீதாவுக்கு பிரசவ வலி எடுக்கவே வியாழக்கிழமை காலையில் விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மாலையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் சங்கீதாவும் உயிரிழந்தாா். விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் தாயும் குழந்தையும் பலியாகக் காரணம் என உறவினா்கள் குற்றம் சாட்டினா்.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கீதாவின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் உசிலம்பட்டி -பேரையூா் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உசிலம்பட்டி கோட்டாட்சியா் சௌந்தா்யா, வட்டாட்சியா் செந்தாமரை ஆகியோா் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றதைத் தொடா்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.