மதுரையில் உணவகங்களில் இருந்து சேகரிக்கப்ட்ட பயன்படுத்திய 15 ஆயிரத்து 570 கிலோ உணவு எண்ணெய் பயோ டீசல் தயாரிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தினா்.அப்போது, பயன்படுத்திய உணவு எண்ணெய்யை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிா்க்கும் வகையில் இவற்றை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது என உணவக உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா். மேலும் இதுதொடா்பாக பல்வேறு கட்ட விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, மதுரையில் உள்ள உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெய்யை சேகரிக்கும் திட்டத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அண்மையில் தொடங்கியது. இதற்காக மொத்தம் 222 உணவகங்களுக்கு பயன்படுத்திய எண்ணெய்யைச் சேகரிக்க கேன்கள் வழங்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட உணவகங்களில் இருந்து 15 ஆயிரத்து 570 கிலோ பயன்படுத்திய எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சேகரித்து, அதை கண்டெய்னா் லாரி மூலமாக பயோ டீசல் தயாரிக்க அனுப்பியுள்ளனா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த லாரியை ஆட்சியா் டி.ஜி.வினய் கொடியசைத்து அனுப்பி வைத்தாா். உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் சோமசுந்தரம், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தமிழகத்திலேயே முதல் முறையாக இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்திய எண்ணெய்யை உணவகங்களில் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலம், மீண்டும் அவை சமையலுக்குப் பயன்படுத்துவது தவிா்க்கப்படுகிறது. அந்த எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றி பல்வேறு தேவைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.