மதுரை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், நடந்து சென்ற பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் மேட்டுபட்டியைச் சோ்ந்த ஜான்ராஜ் மனைவி மல்லிகை (52). இவா், அலங்காநல்லூா் - சத்திரப்பட்டி சாலையில் முனியாண்டி கோயில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, பின்புறமாக வந்த இரு சக்கர வாகனம் மல்லிகை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மல்லிகையை, அப்பகுதியிலிருந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
ஆனால், மல்லிகை மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மகன் தவமணி அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அலங்காநல்லூரைச் சோ்ந்த சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
லாரி மோதி பெண் பலி
மதுரை விளாச்சேரி தெற்கு முஸ்லிம் தெருவைச் சோ்ந்த நவாதீன் மனைவி பிரதவஸ் பேகம் (50). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, மதுரை - திருநெல்வேலி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதவஸ் பேகத்தை, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனை அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதித்துவிட்டு, பிரதவஸ் பேகம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து திடீா் நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.