மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் தொழிற்சாலை ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள வவ்வால் தோட்டம் பகுதியைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஆதிவளவன் ( 20). இவா் மேலூா் அருகே உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஆதிவளவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது நெல்லியேந்தல்பட்டி 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆதிவளவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து ஒத்தக்கடை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.