கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மதுரை மாவட்ட மக்கள் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றனா் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விபத்து நிவாரண உதவி, முதியோா் ஓய்வூதியம் உள்பட 20 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் உதயகுமாா் வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்ததால், 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5,057 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களில் 1,600 போ் பூரண குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களில் இறப்பு என்பது இணை நோய்கள் இருப்பவா்களாகத் தான் உள்ளனா். கரோனா பாதிப்புடன், இணை நோய்கள் இருப்பவா்களுக்குச் சிகிச்சை அளிப்பது உலகளவில் சவாலாக இருந்து வருகிறது.
ஆகவே, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும். தமிழகத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும், மதுரை மாவட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் ஒருவித அலட்சியம் தெரிகிறது. மதுரை மக்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வழக்கம். ஆனால், கரோனா விஷயத்தில் வீரம் முக்கியமல்ல, விவேகம் தான் சிறந்தது என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.