சாத்தான்குளம் கொலைவழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் சீதர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அதில் சார்பு ஆய்வாளர் பால்துரை, காவலர் தாம்சன் ஆகிய இருவரை தவிர, மீதமுள்ள 8 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், போலீஸார் பயன்படுத்திய லத்தி, ரத்தக்கறை படிந்த ஆடைகள் உள்ளிட்ட தடயங்கள் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸாரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில நீதித்துறை நடுவர் ஹேமந்தகுமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரால் முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சீதர்,சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஸ், பாலகிருஸ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜா ஆகியோர் ஆஜராகினர்.
சிபிஐ தரப்பில், இவர்கள் 5 பேரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரப்பட்டது. இதனையேற்ற நீதித்துறை நடுவர், 5 போலீசாரை வியாழக்கிழமை மாலை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.