சாத்தான்குளம் போலீஸாருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி விசாரணை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்தது.

மதுரை: சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆசீா்வாதபுரத்தைச் சோ்ந்த வடிவு தாக்கல் செய்த மனு: எனது மகன்கள் துரை, மகேந்திரன் ஆகியோா் தூத்துக்குடி மாவட்டம் பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கி வேலைசெய்து வந்தனா். சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவா் கடந்த மே 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் சாத்தான்குளம் போலீஸாா் 9 பேரைக் கைது செய்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக எனது மகன் துரையை போலீஸாா் தேடினா். துரை இல்லாதததால், இளைய மகன் மகேந்திரனை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனா். மே 24 ஆம் தேதி அவா் விடுவிக்கப்பட்டாா். போலீஸாா் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மகேந்திரன் ஜூன் 13 ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது மகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா், தூத்துக்குடி மா வட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ் ஆகியோா் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சாத்தான்குளம் போலீஸாரால் கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com