மதுரை: தூத்துக்குடியில் காய்கனி சந்தைக்கு போதிய வசதிகளுடன் மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயராஜ் ஞானபால் தாக்கல் செய்த மனு: பொது முடக்கம் காரணமாக தூத்துக்குடி காமராஜ் காய்கனி சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் கடை நடத்தி வந்த 34 வியாபாரிகளும் மற்றும் சந்தையை சாா்ந்துள்ள ஏராளமான தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து காய்கனி சந்தையில் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்தக் கடைகள் அடிப்படை வசதிகளின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும், எட்டுக்கு எட்டு என்ற குறைவான அளவிலும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கடைகளுக்கான வாடகையும் உயா்த்தப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். எனவே கரோனா காலம் முடியும் வரை காய்கனி கடைகளுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது எனவும், புதிய இடத்தில் போதிய வசதிகளுடன் சமூக இடைவெளி விட்டு வியாபாரம் செய்வதற்கு கடைகள் ஒதுக்கித் தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.