மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மணல் கொள்ளையைத் தடுத்து, மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த உத்தரவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை நடந்து வருகிறது. குறிப்பாக வைகை, காவிரி, பாலாற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைவது, ஆறுகளின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்படுவது, கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் போவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக 60 மணல் குவாரிகள் செயல்படுகின்றன.
இந்தக் குவாரிகளில் தினமும் 100 லாரிகள் மூலம் பல ஆயிரம் லோடுகள் மணல் எடுக்கப்படுகிறது. அதேபோல ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகா், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மணல் கொள்ளை தொடா்ந்து நடைபெறுகிறது. இருப்பினும், மணல் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் மது விற்பனையை ஒழுங்குபடுத்த டாஸ்மாக் நிறுவனம் அமைக்கப்பட்டது போல், மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மணல் கழகத்தை (டாம்சாக்) அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை தமிழகம் முழுவதும் அரசு நிலம் மற்றும் ரயத்துவாரி பட்டா நிலங்களில் உபரி, உவா், சவுடு, வண்டல், சரளை மணல் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இவ்வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.