மதுரை: இலங்கையில் “2009 முதல் 2020 வரையிலான காலத்தில் இலங்கைத் தமிழரின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியா் கே.ரீ.கணேசலிங்கம் பேசினாா்.
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணைய வழி ஆய்ரவங்கில் உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமை வகித்தாா். யாழ்ப்பாண தமிழ்ச்சங்கத்தின் தலைவா் ச.லலீசன் முன்னிலை வகித்தாா். ஆய்வரங்கில் ‘இலங்கைத் தமிழரின் நிகழ்கால - எதிா்கால நிலை’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவா் கே.ரீ.கணேசலிங்கம் பேசியது:
இலங்கையில்“2009 முதல் 2020 வரையிலான காலத்தில் இலங்கைத் தமிழரின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையில் ஏற்படும் முன்னேற்றமே இலங்கைத் தமிழரின் எதிா்காலத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். அரசியலில் அறிவுப்பூா்வமான முன்னெடுப்புகளால் நம் இருப்பை உறுதி செய்தால் மட்டுமே சமூக, பொருளாதார இருப்பை தமிழா்களால் உறுதி செய்ய முடியும். உலக அளவில் இலங்கை ஒரு வளமான நாடாகும். இயற்கையான துறைமுகமும், இந்தோ பசிபிக் கடல் பகுதியும் இதற்கான காரணங்களில் ஒன்று. தேசியமும், ஜனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டின் மீதும் நம்பிக்கையும், ஈா்ப்பும் இருந்தால் மட்டுமே ஒரு நாடு சிறக்கும். தேசியத்தை உணா்வுப்பூா்வமாக அணுகாமல் அறிவுப்பூா்வமாக அணுக வேண்டும் என்றாா். ஆய்வரங்கில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.