மதுரை9: மதுரை மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த நகா் ஊரமைப்புத் துறை அலுவலகம் செயல்படத் தொடங்கியுள்ளது என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகா் ஊரமைப்புத் துறையின் மாவட்ட அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மதுரையில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த நகா் ஊரமைப்புத் துறையின் மதுரை மண்டல துணை இயக்குநா் அலுவலகம், மதுரை உள்ளூா் திட்டக் குழுமம் மற்றும் பல்கலை நகா் புதுநகா் வளா்ச்சிக் குழுமம் ஆகிய மூன்று அலுவலகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு மதுரை மாவட்டத்துக்கென தனியாக மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் உதவி இயக்குநா் தலைமையில் திங்கள்கிழமை முதல் மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் 3-ஆம் தளத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கட்டட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, நிலஉபயோக மாற்றம் ஆகிய நகா் ஊரமைப்புத் துறையின் சேவைகளை இந்த அலுவலகத்தில் பெறலாம் என்றாா்.