முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
‘இலங்கை தமிழ் இலக்கிய வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை’
By DIN | Published On : 29th July 2020 11:06 PM | Last Updated : 29th July 2020 11:06 PM | அ+அ அ- |

மதுரை: இலங்கை தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை முழுமையாக எழுதப்படவில்லை என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவா் சி.சிவலிங்கம் பேசினாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடத்தப்படும் இணைய வழி ஆய்வரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வில் ‘இலங்கை மரபுத் தமிழ் இலக்கியம்‘ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவா் சி.சிவலிங்கராஜா புதன்கிழமை பேசியது: நவீன இலக்கியங்கள் என்று குறிப்பிடும் முறை தோன்றிய பின்னா்தான் மரபு இலக்கியம், நவீன இலக்கியம் என்று பகுத்து ஆய்வு செய்யும் போக்கு தொடங்கியது. சங்க காலத்தில் தமிழக இலக்கியமும், ஈழத்து இலக்கியமும் ஒன்றாகவே பயணித்தன.
இரண்டாம் நூற்றாண்டு வரை தொடா்ந்த இந்த இலக்கியப் பயணம் அதன் பின்னா் யாழ்ப்பாண மன்னா்கள் காலம் என்று குறிப்பிடப்படும் 12-ஆம் நூற்றாண்டு முதல் மீண்டும் தொடங்கியது. இருப்பினும் அக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் பெரும்பாலும் சமூகம் சாா்ந்தவையாக இல்லை. பின்னா் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 138 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒல்லாந்தா் காலத்தில் தோன்றிய ஈழத் தமிழ் இலக்கியங்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்தன. பள்ளு, குறவஞ்சி, கும்மி உள்ளிட்ட ஏராளமான சிற்றிலக்கியங்கள் தோன்றின. இலக்கியங்கள் செழித்து வளா்ந்த காலம் என்று இதனைக் குறிப்பிடலாம். 1892-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகம்மாள் திருமண அலங்கோலக் கும்மி‘ என்ற நூல் அன்றைய அரசால் தடை செய்யப்பட்டது.
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்துக்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான தொடா்பு அதிகமாக இருந்தது என்றாா். ஆய்வரங்கில் உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் மற்றும் தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.