மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பசுமலையில் உள்ள கலைக் கல்லூரிகளில், குறைவான அளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனியார் பொறியியல் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வந்த பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் முதல் தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட துணை ஆட்சியர் பிரியங்கா, மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவரை அவரது உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேற்றியதால், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரச ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவர் தனுஸ்கோடி திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.