கரோனா பாதிப்பையொட்டி தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
கரோனா பாதிப்பு எதிரொலியாக மாா்ச் 24 ஆம் தேதி மாலை முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு தங்களின் ஊா்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனா். அவ்வாறு வாகனங்களில் சென்றுகொண்டிருப்போரிடம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச் சாவடிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கரோனா வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா் ராஜகோபால் முறையிட்டாா்.
அதற்கு நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தினா்.